மூலத்தை தணிக்கும் முசுட்டை

மூலத்தை தணிக்கும் முசுட்டை

 கோடைக்காலத்தில் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது உஷ்ணம் சார்ந்த பல நோய்கள் உண்டாகின்றன. சிறுநீர் எரிச்சல், கண் எரிச்சல், மலவாயில் எரிச்சல் போன்ற எரிச்சல்படுத்தும் பல சங்கடங்கள் கோடைக்காலத்தில் அணிவகுக்க ஆரம்பித்துவிடும். என்னதான் அதிகளவு நீர் அருந்தினாலும், பழங்களை உட்கொண்டாலும் சிலருக்கு மலவாயில் தோன்றும் எரிச்சல் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். ஏனெனில் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் குடற்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, மலம் இறங்கும் தன்மை குறைந்து, மலவாயில் இறுக்கம் உண்டாகி, மலம் கழிக்கும் பொழுது வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த வெடிப்புகளில் வலியும், எரிச்சலும் தோன்றி, சில நேரங்களில் ரத்தக்கசிவும் உண்டாக ஆரம்பிக்கும்.
மூலநோயின் ஆரம்பமாகவும், ஆசனவாயின் வெடிப்பாகவும், சிறு, சிறு குருக்களாகவும், மலப்பகுதியில் தோன்றும் இந்நோயானது நாட்கள் செல்லச் செல்ல ரத்த மூலமாகவும், வெடிப்பு மூலமாகவும் மாறி, மூலம் முற்றி விட வாய்ப்புண்டு.
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய காரஉணவுகளையும், கொழுப்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் உட்கொள்வதுடன், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து, போதுமான அளவு நீரை அருந்தி வந்தால் மூலநோயின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களையும், கிழங்குகளையும் உட்கொள்வதுடன், இரவில் செரிக்க கடினமான பொருட்களை உட்கொண்டு, அதனால் தோன்றிய மலச்சிக்கல், பல நாட்கள் நீடிக்கும் பொழுது, மூலமாக மாறி விட வாய்ப்புண்டு. மேலும் மலம் மற்றும் அபான வாயுவை அடக்குவதற்காக ஆசன வாயை நாம் இறுக்கமாக வைத்துக்கொள்வதாலும் மலவாய் சுருங்கி, மூலநோய் ஏற்படுகிறது.
மூலநோயால் ஏற்படும் மலவாய்ப்புண்கள் மற்றும் வெடிப்பு நீங்க அவ்விடங்களில் நெய்ப்பு தன்மையுடைய களிம்புகளை தடவுவதுடன், மூல நோயின் தீவிர நிலையில் வழுவழுப்பான திரவத்தை கொண்டு பீச்சு என்னும் எனிமா செய்யவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்வதுடன், இரவில் விரைவில் தூங்கி, அதிகாலையில் எழுந்து சர்வாங்காசனம், விபரீதகரணி போன்ற ஆசனங்களை செய்து வந்தால் மூலநோயிலிருந்து தப்பிக்கலாம். மூல நோய் நம்மை அணுகாமலிருக்கவும், அதனால் தோன்றும் மலவாய் புண்களை ஆற்றவும் பயன்படும் அற்புத மூலிகை முசுட்டை.



ரைவியா ஆர்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட கன்வாலவுலேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த முசுட்டை கொடியின் இலையில் எர்ஜின், ஐசோஎர்ஜின் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவை மலக்குடலை சுருங்கி விரியச் செய்து மலத்தை எளிதாக கழியச் செய்வதுடன் மலவாயிலுள்ள புண்களை ஆற்றி ரத்தக்கசிவை தடுக்கின்றன.
முசுட்டை கொடியின் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடித்து ஒரு கிராமளவு சாப்பிட மூலநோயினை தொடர்ந்த மலச்சிக்கல் நீங்கும். மேலும் 10 கிராம் உலர்ந்த முசுட்டை கொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, 125 மிலியாக சுண்டியப் பின் வடிகட்டி அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்க மூலச்சூடு தணியும், மலம் இளகும். முசுட்டை இலையை இடித்து சாறெடுத்து, சமஅளவு நல்லெண்ணெயுடன் கலந்து, காய்ச்சி, மலவாயில் ஏற்படும் புண்கள், வெடிப்பு ஆகியவற்றின் மேல் தடவி வர புண்கள் ஆறும்.